வரும் தேர்தலில் நாம் எதைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முதலில் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அது நமது அரசியல் அமைப்பைப் (Polity) புரிந்து கொள்ள உதவும்
பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, நிர்வாக அணுகுமுறை இவற்றில் காங்கிரசிற்கும் பா.ஜ.கவிற்கும் இடையே பெரும் வேறுபாடுகள் கிடையாது. ஆனால் அவை என்றேனும் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரே அணியாக தேர்தலை சந்திக்குமா?
காங்கிரஸ் தன்னோடு பொருளாதாரக் கொள்கைகளில் பெரிதும் முரண்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளோடு உடன்பாடு கொண்டு தேர்தலை சந்திக்குமே தவிர பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த நோக்குக் கொண்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு கொள்ளாது. அது ஏன்?
இட ஒதுக்கீடு, மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவற்றில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கொள்கை ரீதியாக பெரும் கருத்து வேறுபாடுகள் இல்லை.(அணுகு முறையில் வித்தியாசம் இருக்கிறது) அவை ஓரணியில் நின்று தேர்தலை சந்திக்குமா?
அதிமுகவும், திமுகவும் தங்கள் கொள்கைகளோடு முற்றிலும் முரண்பட்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுமே தவிர இரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்படாது. அது ஏன்?
ஏன் இவை சாத்தியமாகவில்லை என்றால் நம்முடைய ஆட்சி முறை (governance) சித்தாந்தம் சார்ந்தது அல்ல. அதிகாரம் சார்ந்தது. எனவே இங்கே கட்சிகளுக்கு சித்தாந்தத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்றினால் போதும். பெரிய கட்சிகள் தங்களைப் போன்ற இன்னொரு பெரிய கட்சியை அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் போட்டியாளாராகக் கருதுகிறார்களே தவிர கருத்தொற்றுமை கொண்டவர்களாகக் கருதுவது இல்லை. கருத இயலாது என்பதுதான் நிதர்சனம்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் நம் நாட்டில் தனியொருவராக ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வலு இல்லை. இந்திய விடுதலைக்குப் பிந்திய ஆரம்ப நாள்கள், திராவிட இயக்கத்தின் வேகம் கொண்ட 1950-60கள், எமெர்ஜென்சிக்கு முந்திய இடதுசாரி இயக்கத்தின் 'பொற்காலங்கள்' இவற்றோடு ஒப்பிட்டால், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஆனால் கட்சிகளின் மீது விசுவாசம் கொண்ட, வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தும், நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.கண்ணை மூடிக் கொண்டு ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மனோபாவம் மாறிவருகிறது. இதற்கு, கட்சிகளிடையே ஏற்பட்ட சித்தாந்த வெறுமை, ஒரு தலைவரை மட்டுமே சார்ந்து கட்சயை வளர்க்கும் அணுகுமுறை காரணமாக, அந்தத் தலைவர் மறையும் போது ஏற்படும் வெற்றிடம், வாக்காளர்களின் கல்வி வளர்ச்சி, ஊடகங்களின் செயல்பாடுகள், அரை நூற்றாண்டுக்கும் மேலான ஜனநாயக அனுபவம், கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபாடு இல்லாத இளையதலைமுறை எனப் பல காரணங்கள் உண்டு.
இதனால் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் தனியாக ஆட்சியைப் பிடிக்கும் வலு இல்லை. உயர்ந்து நிற்கும் மரத்தில் கையை நீட்டிக் கனி பறிக்க முடியாமல் போனால், ஒரு கழியின் முனையில் சிறு அரிவாளைக் கட்டிக் கொண்டு பறிக்க முயல்வது போல, இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஆட்சிக் கனியைப் பறிக்கக் கூடுதலாக ஓர் சாதனம் தேவைப்படுகிறது. அந்த சாதனம்தான் தன்வசம் சிறிய வாக்கு வங்கியைக் கொண்ட சிறு கட்சிகள்.
இந்தச் சூழலில் சிறிய கட்சிகளின் நிலை என்ன? பெரிய கட்சிகளின் தேவையை அவை நிறைவு செய்ய இணங்குகின்றன. ஏனெனில் அதனால் அவற்றிற்கு நட்டம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்த சிறிய கட்சிகளால் ஒரு போதும் தனியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுகவோ, அதிமுகவோ என்றாவது தங்களது தனி பலத்தினால் மட்டும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியுமா? எனவே கூட்டணியில் ஒரு junior partner ஆகப் பங்கேற்பதில் நமக்கு நட்டம் இல்லை என்று சிறிய கட்சிகள் கருதுகின்றன. நட்டமில்லை சரி. லாபமுண்டா? நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விசுவாச வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் காலகட்டத்தில், தங்களது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளும் கட்டாயம் அவற்றிற்கு இருக்கின்றன. அதற்கு ஒரே வழி கூட்டணியில் பேரம் பேசி அதிக பட்ச இடங்களைப் பெறுவதுதான். அதன் மூலம் தங்கள் விசுவாசிகளுக்கு அவை உதவ முடியும்.
ஆனால் ஒரே கட்சியோடு தொடர்ந்து உற்வைப் பேணிவந்தால் சிறு கட்சிகள் நாளடைவில் சிறுக சிறுகத் தேய்ந்து பின் காணாமல் போகும். முஸ்ளீம் லீக் இதற்கு ஒர் உதாரணம். காயிதே மில்லத காலத்தில் தமிழக முஸ்லீம் சமுதாயத்தின் அபிமானத்தைக் கணிசமாகப் பெற்றிருந்த முஸ்லீம் கட்சி இன்று தனது அடையாளத்தை இழந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கிறது. சிறிய கட்சிகள் ஒரே கூடடணியில் தொடர்ந்தால், அவற்றின் மீது 'எல்லாம் நம்ப சொன்னாக் கேட்டுப்பாங்கப்பா' என்ற Take it for granted மனோபாவம் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுவிடும்.
கட்சிகளின் அவசியம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் தார்மீக ரீதியில் சரியா?
சித்தாந்ததைக் காப்பாற்றும் அரசியல் என்பது போய் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் என்ற நிலை ஏற்பட்ட போதே தார்மீகக் கேள்விகளுக்கு இடம் இல்லாது போய்விட்டது. நமது ஐம்பதாண்டு குடியரசில், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எதிர்மறை அரசியலை, அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், ஊடகங்கள், கடைப்பிடித்து வருகின்றன. யார் வேண்டும் என்பதற்குப் பதில் யார் வேண்டாம் என முடிவு செய்வதை நம் தேர்தல்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 1967ல் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டார் ராஜாஜி.அதே ராஜாஜி, 1971ல் இந்திராவை அகற்ற வேண்டும் என்பதற்காக 1967ல் தான் எதிர்த்த காமராஜரோடு உறவு ஏற்படுத்திக் கொண்டார்.1967ல் திமுக அணியில் இருந்த இடதுசாரிகள், பின்னால் திமுகவை அகற்றுவதற்காக எம்ஜிஆரோடு தோழமை கொண்டார்கள். பின்னர் அதிமுகவை அகற்றுவதற்காக எந்தத் திமுகவை அகற்றுவதற்கு முயன்றார்களோ அதே திமுகவோடு உறவு கொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக பாரதிய ஜனதாவோடு உறவு கொண்ட திமுக பின் பாஜகவை அகற்றுவதற்காக காங்கிரசோடு 2006ல் தோழமை பூண்டது.1991ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக அதிமுகவோடு கூட்டணி கண்டது காங்கிரஸ். 1996ல் அதிமுகவை அகற்றுவதற்காக, தமாக வடிவில் அது திமுகவோடு உறவு கொண்டது.இன்று திமுக கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் அதைப் பதவியிலிருந்து அகற்ற அதிமுகவோடு கூட்டணி கண்டவர்கள்தானே?
பதவியைக் காப்பாற்றிக் கொள்ள கட்சித் தாவல், அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கை முரண்பாடு கொண்டவர்களோடு கூட்டு என்பதெல்லாம் ராஜாஜி துவங்கி வைத்த அரசியல் கலாசாரம். ஒரு புறம் அவரை சாணக்கியராகக் கொண்டாடிக் கொண்டு மறுபுறம் அரசியலில் தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று வருந்துவது, இரட்டை வேடம். நாம் வருந்த வேண்டியதெல்லாம் எதிர்மறை அரசியலுக்காக; அரசியலில் ஏற்பட்டுள்ள சித்தாந்த வெறுமைக்காக.
வெறுமனே வருந்திக் கொண்டிருப்பதைவிட, வாக்காளர்களாகிய நாம் நடைமுறை சாத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். அரசியல் கட்சிகள் தங்கள் நலன்களைப் பேண முயற்சிக்கும் போது நாம் நம் நலனை, அதாவது சமூகத்திற்கான பொது நலனைக் கருத்தில் கொண்டு வாக்களிக்கலாம்.
இன்று மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது? எந்த ஒரு தனிக் கட்சியின் ஆட்சியும் அல்ல. கூட்டணி ஆட்சிதான்.
எப்படி?
கூட்டணி ஆட்சி என்பது ஒரு தனிநபரின் ஆட்சி அல்ல. ஒரு தனிநபர் ஆட்சி என்பது அவரைச் சார்ந்து ஒரு வழிபாட்டு மனோபாவத்தை (cult) உருவாக்கவே உதவி வந்திருக்கிறது. அந்த மனோபாவம் தலைவர்கள் தவறிழைக்கும் போது தட்டிக் கேட்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது. எஜமான்கள் சார்ந்த நிலவுடமைச் சமுதாயத்தின் நிலைக்கு ஜனநாயகத்தைப் பின்னோக்கி எடுத்துச் சென்று விடுகிறது.
இன்றுள்ள தலைவர்கள் கட்சியையும் அரசாங்கத்தையும் தாங்கள் முதலீடு செய்து வளர்த்த ஒரு தனியார் கம்பெனியைப் போல தலைமைப் பதவியை வாரிசுகளுக்குரியதாக ஆக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியின் பேரனும். ராமதாசின் மகனும், மூப்பனாரின் மகனும், தத்தம் கட்சிகளுக்கு செய்த பங்களிப்புகள் என்ன? தத்தம் கட்சிகளின் வளர்ச்சிக்கு அளித்த உழைப்பு என்ன? கட்சியில் அவர்களை விட அதிக காலம் உழைத்தவர்களை விட இவர்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தங்களுக்காக அல்ல, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான் கட்சி என்ற நிலையிலிருந்து, அந்த அதிகாரம் தங்கள் குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு அரசியல் கட்சிகளின் நடத்தை மாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மிருகபலத்துடன் கூடிய ஒரு கட்சி என்ற நிலையை மக்கள் மாற்ற வேண்டும்.
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. கருணாநிதிதான் என்பது பரவலாக உள்ள எண்ணம். ஆனால் கூட்டணிக் கட்சிக் கூட்டங்களுக்கும், மாநாட்டு மேடைக்கும் அவர் வரும் போது யாராவது இரண்டு பேரின் தோளைப் பிடித்துக் கொண்டுதான் நடக்க முடிகிறது என்பதைத் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. வயோதிகத்தின் சுமை அவர் மீது அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை, பொதுவாக வயோதிகர்களை மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி விடும். பலர் அந்த நிலையில், தங்களைச் சுற்றியிருப்பவர்களை மீறி ஏதும் செய்ய இயலாத சூழ்நிலைக் கைதியாக மாறிப் போனதையும் வரலாறு கண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதாவது இன்று வளர்ச்சியின் வாயிலில் (Threshhold of development) நிற்கிறது. தொடர்ந்து முயன்றால் அது இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே வளர்ச்சியைப் பொறுத்தவரை வரும் ஐந்தாண்டுகள் மிக முக்கியமானவை (crucial years for development). இந்த நிலையில் ஆட்சிக்கு ஒரு துடிப்பான ஒரு தலைமை தேவை. அதற்குக் கருணாநிதியின் வயது இடம் கொடுக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. சிறிது காலத்திற்குப் பிறகு கருணாநிதி இளைய தலைமுறைக்கு வழிவிட்டு, ஸ்டாலினை முதல்வராக ஆக்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம். அந்த நிலையிலும் கூட, பெரிய நிர்வாக அனுபவம் இல்லாத ஸ்டாலின் ஏதும் பெருந்தவறு செய்துவிடாதிருக்கவும், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் போது (crisis management) சரியான முடிவுகள் எடுக்கவும், ஓரு கூட்டுத் தலைமை-அதாவது கூட்டணி ஆட்சி- உதவும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட, 2001-04 ஆண்டுகளில் ஜெயலலிதா எடுத்த தீவிரத்தன்மை கொண்ட முடிவுகளைப் போன்ற முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்து நிற்கும் ஒரு தடைக்கல்லாகவும் கூட்டணி ஆட்சி அமையும்.இன்று ஆளும் கட்சி அறிவித்துள்ள சலுகைகள் தேர்தலை மனதில் கொண்டு அளித்துள்ள சலுகைகளோ, அவை தேர்தலுக்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடுமோ, என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. அவை திரும்பப் பெறப்படாமல் காக்கவும் கூட்டணி ஆட்சி தேவை.
ஆளுங்கட்சியை மட்டுமல்ல, மற்ற கட்சிகளையும் கூடக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய சூழல் இன்றிருக்கிறது. ரஜனிகாந்திற்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட விரோதத்தை அரசியல் பிரசினையாக்க பாபா பட வெளியீட்டின் போது முயன்றது பா.ம.க. பின்னர், தங்கர் பச்சனுக்கும், குஷ்புவிற்கும் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட மனத் தாங்கலை, ஒரு கலாச்சாரப் பிரசினையாகத் திரிக்கவும் அது முற்பட்டது. சில நுண் அரசியல் தேவைகளுக்காகப் பொது அரசியல் அரங்கை, தன் அரசியல் பலத்தை அது பயன்படுத்திக் கொள்ள முயல்வதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். அதே நேரம் கூட்டணிக்குள் செயல்படும் போது அதன் நிலை ஒரு நிதானத்திற்குள் இருப்பதையும் பார்க்கிறோம். தொழிற்கல்விகளுக்கான பொதுத் தேர்வு, மருத்துவப் படிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் அனைத்திந்திய மருத்துவக் கவுன்சிலின் நிலைபாடு காரணமாக உருவானது. இந்திய மருத்துவ அமைச்சகம் பாமகவின் வசம் இருந்தும் கூட, அதனால் இந்த நிலைபாட்டை மாற்ற இயலவில்லை. புகைபிடிப்பதைத் திரைப்படங்களில் தடை செய்யும் டாக்டர் அன்புமணியின் விருப்பத்திற்குத் தகவல் ஒலிபரப்புத் துறையின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. ஈழப்பிரசினையில் மதிமுக கொண்டுள்ள நிலை எதுவாயினும், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வந்த போது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்த மதிமுகவால் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க முடியவில்லை. Moderation என்னும் நிதானப் போக்கை அரசியல் கட்சிகள் மீது திணிக்க கூட்டணி ஆட்சி என்பது உதவும்.
மன்மோகன் சிங் போல 'முழு அரசியல்வாதி'யாக இல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பிற்கு வரும் சாத்தியத்தையும் கூட்டணி ஆட்சி அளிக்கும். அப்படி ஒரு தலைவரை இன்று தமிழக அரசியல் அரங்கில் தொடுவானம் வரைத் தேடிப்பார்த்தாலும் காணமுடியவில்லை என்றாலும், வருங்காலத்தில் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க கூட்டணி ஆட்சி உதவலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் முதல்வராவார் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? வளர்ச்சியை நோக்கிப் போக வேண்டிய ஒரு தருணத்தில் இது போன்ற அரசியல்வாதிகளாக இல்லாத தலைவர்கள் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த பின் அமைந்த முதல் அமைச்சரவையில் ஷியாம் பிரசாத் முகர்ஜி, சர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கர், போன்ற காங்கிரஸ் கட்சியைச் சாராதவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதையும், பின்னாளில் கூட, மக்கள் தொகை நிபுணர் டாக்டர் சந்திரகேகர், நீர் வள வல்லுநர் டாக்டர் கே.எல்.ராவ் போன்றவர்கள் தங்கள் துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் வளர்ச்சிப்பருவத்தில் இது போன்ற சூழல் அவசியமானது என்பதியும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்
கூட்டணி ஆட்சியின் இன்னொரு முக்கியமான அம்சம் குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டம்.இது பல சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஆட்சியின் நிலைபாடு என்பது என்ன என்பதை ஆட்சி துவங்கும் முன்னரே தெளிவுபடுத்தும். ஆட்சியின் செயல்பாட்டை அளவிட ஓர் அளவுகோலாகவும் பயன்படும். தனிக் கட்சி ஆட்சியில் இதற்கான வாய்ப்பு இல்லை. அவை தேர்தல் அறிக்கைகள் வெளியிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை பெரும்பாலும் அதற்கு முந்திய தேர்தலின் போது வெளியிடப்பட்டவையின் நகல்களே. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த முடியாமல் போனதற்கும், இப்போதுள்ள மன்மோகன் ஆட்சி, அது விரும்பிய வேகத்தில் பொதுத் துறையை தனியார்மயமாக்க முடியாததற்கும் குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டம்தான் முக்கிய காரணம்.
நம் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதனால் பல சிறு கட்சிகள்,சமூகங்கள் இவற்றின் குரல்கள் அதிகார மையங்களை எட்டுவதே இல்லை. எட்டினாலும் பொருட்படுத்தப்படுவதே இல்லை. கக்கனுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக, எந்த தலித்தாவது, அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகித்ததுண்டா? விகிதாசரப் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி ஒரு மாற்று.
எனவே இந்த முறை வாக்களிக்கும் போது எந்தக் கட்சியும் மிருகபலம் பெற்று ஆட்சியில் அமர்வது போல வாக்களிக்காதீர்கள். அது உங்களை நீங்களே தோற்கடித்துக் கொள்வதாகும். கூட்டணி ஆட்சியை அரசியல் கட்சிகள் மீது நிர்பந்தியுங்கள்.
புதிய கதவுகள் விரியத் திறக்கட்டும்
*
இது திசைகள் ஏப்ரல் இதழில்வெளியாகியுள்ள கட்டுரை. இது போன்ற பல செறிவான கட்டுரைகளைத் தாங்கி ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது.(www.thisaigal.com) வாசகர்களும் விவாதிக்கலாம்.-திசைகள்
3 Comments:
Jegadeesan's article about nepal is very informative.The dilemma for india is How to reconcile the democratic aspirations of VILLAGE nepal represented by maoists,Urban middleclass represented by the sevenparty alliance,feudalism represented by vishnu avtar the King,nepalese army allied to king and getting arms especially tanks from china.China has openly condemned the maoists for calling themselves thus and sided with the king.The villagers have already tasted power of blackmailing the old ruling upper castes and living without paying any taxes to the burecaracy.The real trick for India is to make the present 3 month ceasefire declared by maoists to continue and declare its own ceasefire by the RNA and Abjure VIOLENCE BY maoists.But the tricky King supported by china/Pakistan will not allow this.Karansingh is not a honest broker.Will Yechury succeed?
Dear Sirs,
Please covey our congradulations to Mr. A.Jagadesan for his article
"THAMILNATTU THEIRTHAL VANNATHIRAI" ( தமிழ்நாட்டு தேர்தல் வண்ணத்திரை) in your April Editon for predicting so clearly the poll verdit of Tamilnadu. His conclusion
"முதல் முறையாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வரும். கருணாநிதி இருக்கும் வரையில் அவ்வளவாக பிரச்சனை இராது. ஆனால் அவருக்கு பின் கூட்டணியில் பெரிய பிரளயமே காத்திருக்கிறது"
is the order of the day.
Radhakrishnan.K
அப்பா சிறு கதை படிக்க நன்றாக இருந்தாலும், முடிவு அவ்வளவு நன்றாக இல்லை. மனக்கஷ்டத்தில் வாழ்பவர்களுக்கு இது ஒரு விருந்து போல் இருந்திருக்கலாம். இம்மாதிரியான கதைகள் மூலம், நாம் மென்மெலும் தற்கொலையை ஆத்ரிக்கவே செய்கிறோம். மேலும் அப்பா ஒரு பொம்மை ஆக்கப்ப்ட்டு இருக்கிறார். மனிதன் எவனாக இருந்தாலும், அவனது ஆத்மா இவ்வுலகில் உள்ள எல்லாவற்றிற்கும் உயர்ந்தது. ஒரு சாதாரண வேலைக்கு, வீட்டில் பெற்றவ்ர்களின் ஏமாற்றத்திற்கு சவால் கொடுத்து, சமாளித்து மீண்டு வர முடியாமல், தன் உயிரை மாய்த்து கொள்ள்வதில்தான் அதற்கு பதில் இருக்கிறது என்பது போன்று சித்தரித்திருப்பது ஏனோ?
Masilamani
Post a Comment
<< Home